நாகை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 14 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றது.
கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதை இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசு, ஒன்றிய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் உரிய தீர்வுகள் இன்னும் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், இலங்கை கடற்படை மீண்டும் தமிழக மீனவர்களை கைது செய்துள்ளது. நகையை சேர்ந்த மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 14 பேரை ஒரு படகுடன் இலங்கை கடற்படை சிறைபிடித்தது. கைது செய்யப்பட்ட 14 மீனவர்களையும் இலங்கை காங்கேசன்துறை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

