ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஜூலை 29ம் தேதி ஜஸ்டின் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஜஸ்டின், மோபின், சைமன், சேகர், டென்சன் ஆகிய 5 பேரையும், இலங்கை கடற்படை படகுடன் சிறைப்பிடித்தனர். மீனவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து 5 மீனவர்களும் தலைமன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, மீனவர்கள் சைமன், சேகர், டென்சன் ஆகியோருக்கு தலா ரூ.14,050 அபராதம் விதித்து உத்தரவிட்டார். ஐஸ்டின், மோபின் ஆகிய 2 மீனவர்களும் 2வது முறையாக சிறைப்பிடிக்கப்பட்டதால் தலா ரூ.73 ஆயிரம் அபராதம், படகு உரிமையாளரான ஜஸ்டினுக்கு மட்டும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். மொத்த அபராதம் இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய் ஆகும். மீனவர்கள் அபராதத் தொகையை செலுத்திய பின் விடுதலை செய்யப்படுவார்கள் என தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.