Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் சிறைபிடிப்பு: தங்கச்சிமடத்தில் மறியல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை கைது செய்து, ஒரு படகையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. இதனை கண்டித்து மீனவர்களின் குடும்பத்தினர் தங்கச்சிமடத்தில் மறியல் போராட்டம் நடத்தினர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று 356 விசைப்படகுகளில் மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். நண்பகலில் இவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

பின்னர் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த இருதய டிக்சனின் விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். படகில் இருந்த மீனவர்கள் டல்லஸ்(56), பாஸ்கரன்(45), ஆரோக்கிய சான்டிரின்(20), சிலைடன்(26), ஜேசுராஜா(33), அருள்ராபர்ட்(53), லொய்லன்(45) ஆகிய 7 பேரையும் கைது செய்தனர். பின்னர் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேல் நடவடிக்கைக்காக மாலையில் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதற்கிடையில் 7 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், மீனவர்களையும், படகையும் விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசு மருத்துவமனை முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ராமேஸ்வரம் - ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஏஎஸ்பி மீரா தலைமையில் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.