சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு மீனவர்கள் 35 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி கைது செய்ததோடு, மூன்று விசைப்படகுகள் மற்றும் ஒரு நாட்டுப் படகை பறிமுதல் செய்திருக்கிறது. அண்டை நாடான இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து இப்பிரச்னைக்கு தீர்வு காணாத பிரதமர் மோடி தமிழர்கள் நலனில் அக்கறை இருப்பதாக பேசுவதை இனியாவது நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இலங்கை அரசு திட்டமிட்டே இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும். மீனவர் சமுதாய பிரதிநிதிகளை அழைத்துச் சென்று பிரதமரை சந்தித்து மீனவர்கள் கைது செய்யப்படும் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
 
 
 
   