ராமேஸ்வரம்: தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட ஒரு டன் பீடி இலைகளை, அந்த நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை புத்தளம் மாவட்டம், கல்பிட்டி கடற்பகுதியில் அந்த நாட்டு கடற்படையினர் நேற்று வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடற்கரையில் சந்தேகத்திற்குரிய வகையில் பண்டல்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைபர் படகை சோதனையிட்டனர். அதில், 30 பண்டல்களில் 956 கிலோ பீடி இலைகள் இருந்தது தெரிய வந்தது. படகுடன் பீடி இலைகளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பான முதற்கட்ட விசாரணையில், தமிழக கடல் பகுதியில் இருந்து பீடி இலைகள் படகில் கடத்தி கொண்டு வரப்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளை அந்நாட்டு சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடத்தலில் தொடர்புடையவர்கள் குறித்து இலங்கை கடற்படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறனர்.
