டெல்லி: இலங்கைத் தமிழர்கள் சட்டப்பூர்வமாக இந்தியாவில் தங்கலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய உள்துறை அமைச்சகம் தண்டனைகளில் இருந்து விலக்களித்துள்ளது. இதன்படி, 2015 ஜனவரி 9ம் தேதிக்கு முன்பு உரிய ஆவணங்கள் இன்றி இந்தியாவுக்குள் நுழைந்து, அரசிடம் அகதிகளாக பதிவு செய்த இலங்கைத் தமிழர்கள் சட்டப் பூர்வமாக தங்குவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது.
இலங்கை தமிழ் அகதிகள், செல்லுபடியாகும் கடவுச்சீட்டுக்கள், பயண ஆவணங்கள் அல்லது விசா இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டால், அவர்களுக்கும் தண்டனை வழங்கப்படாது என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தாமாக முன்வந்து இலங்கைக்குத் திரும்ப விரும்பும் இலங்கையின் தமிழ் அகதிகள், விசா கட்டணங்கள் மற்றும் தங்கியிருக்கும் காலத்தை விட அதிக காலம் இந்தியாவில் தங்கியிருந்தால் அதற்குரிய அபராதங்களையும் உள்துறை அமைச்சகம் தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. சமீபத்தில் அமல்படுத்தப்பட்ட குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டதின் கீழ் உள்ள தண்டனை விதிகளில் இருந்தும் ஒன்றிய அரசு இலங்கைத் தமிழர்களுக்கு விலக்கு அளித்தது குறிப்பிடத்தக்கது.