சென்னை: இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று காலை இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்கள், கடந்த பிப்ரவரி, ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தனித்தனியே 3 விசைப் படகுகளில் நடுக்கடலில் மீன்பிடிக்க சென்றனர். அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, படகு, வலைகள் மற்றும் மீன்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 15 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களை உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர கடிதங்கள் எழுதினார்.
இதையடுத்து இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், அங்குள்ள இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பேரில், 15 மீனவர்களையும் இலங்கை நீதிமன்றம் படிப்படியாக விடுவித்து, அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். மேலும், அவர்களுக்கு உரிய பாஸ்போர்ட் இல்லாததால், அனைவருக்கும் எமர்ஜென்சி சர்டிபிகேட் வழங்கினர். பின்னர் விமான டிக்கெட் உள்பட பல்வேறு ஏற்பாடுகளையும் செய்தனர். இதையடுத்து கொழும்பில் இருந்து சென்னைக்கு ஏர்இந்தியா பயணிகள் விமானத்தில் 15 மீனவர்களும் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் இன்று காலை சென்னை வந்தனர். அவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள், அரசு ஏற்பாடு செய்திருந்த வாகனங்கள் மூலம் சொந்த ஊரான ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தனர்.