Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்று சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசாமி: சேலத்தில் பரபரப்பு

சேலம்: சேலத்தில் 14 வயது சிறுமியை, விளையாட்டு போட்டிக்கு அழைத்து சென்று, சில்மிஷத்தில் ஈடுபட்ட விவகாரம் தொடர்பாக, பயிற்சியாளரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது தம்பியை தேடி வருகின்றனர்.

சேலம் அருகே சித்தனூர் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தேக்வாண்டோ பயிற்சி பெற்று வருகிறார். இதனால், போட்டிகளில் கலந்து கொள்வதற்காக பல இடங்களுக்கு சிறுமி சென்று வந்துள்ளார். கடந்த 6ம் தேதி, திருவாரூரில் நடந்த போட்டியில் பங்கேற்றுள்ளார். இப்போட்டிக்கு சிறுமி உள்பட பலரை, சேலம் சிவதாபுரத்தில் உள்ள தேக்வாண்டோ பயிற்சி அளிக்கும் மாஸ்டர் விஜயகுமார்(44) என்பவர் அழைத்து செல்ல இருந்தார். ஆனால், உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக சென்று விட்டதால், தனது சகோதரரான வெள்ளி பட்டறை தொழிலாளி கணேசன்(42) என்பவரை, தனக்கு பதிலாக அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.

அப்போது, போட்டிக்கு சென்ற சிறுமியிடம், கணேசன் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த விஜயகுமார், திருவாரூருக்கு சென்று, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லகூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனிடையே, போட்டி முடிந்து சிறுமி சேலத்துக்கு வந்ததும், நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உடனடியாக சூரமங்கலம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார், சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட கணேசன், உடந்தையாக இருந்த மாஸ்டர் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், விஜயகுமாரை கைது செய்தனர். தலைமறைவாகி விட்ட கணேசனை போலீசார் தேடி வருகின்றனர்.