ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கம்!
ரயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் முக்கிய வழித்தடங்களில் ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்கள் இயக்கி வருகிறது. இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது; சேலம் வழியாக சென்னை சென்ட்ரல் - கண்ணூர் ஒரு வழிப்பாதை சிறப்பு ரயில் (06009) இயக்கப்படும் இந்த ரயில் இன்று (வியாழக்கிழமை) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு திருவள்ளுவர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக மறுநாள் காலை 5.05 மணிக்கு சேலம் வந்தடையும்.
இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மதியம் 2 மணிக்கு கண்ணூர் சென்றடையும். கண்ணூர்- பெங்களூரு இடையே சிறப்பு ரயில் கண்ணூர்- பெங்களூரு சிறப்பு ரயில் (06125) நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 9.30 மணிக்கு கண்ணூர் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக 30ம் தேதி காலை 5.30 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர், அங்கிருந்து 5.40 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக காலை 11 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் பெங்களூரு - கண்ணூர் சிறப்பு ரயில் (06126) நாளை மறுநாள் (சனிக்கிழமை) பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக இரவு 10.30 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 10.40 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு வழியாக மறுநாள் காலை 7.15 மணிக்கு கண்ணூர் சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.