சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அடுத்த 2 நாளில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அனேக இடங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக நேற்று அனேக இடங்களில் கனமழை பெய்துள்ளது. வெப்பநிலையை பொருத்தவரையில் சேலம் மாவட்டத்தில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது. கரூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில், குமரிக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நேற்று நிலை கொண்டது. இன்று அது மேற்கு- வட மேற்கு திசையில் நகரும் வாய்ப்புள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. மேலும், தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக அடுத்த 2 நாளில் தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 24ம் தேதியில் அது மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தெற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மேலும் மேற்கண்ட திசையில் நகர்ந்து வலுப்பெறும்.
இதன் காரணமாக 20ம் தேதி முதல் 25ம் தேதி வரையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், சிவகங்கை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும் அந்தமான் கடல் பகுதிகள், அதை ஒட்டிய தென்கிழக்கு மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசும். இதேநிலை 23ம் தேதி வரை நீடிக்கும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.


