Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டல காற்று சுழற்சி தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்

சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தில் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. நேற்று மாலை வரையில் பெரியகுளம் 21 மிமீ, மதுரை 18மிமீ, பெய்துள்ளது. இந்நிலையில், தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்நேற்று கனமழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்றும், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரியிலும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதேநிலை 16ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலையை பொருத்தவரையில் இன்று இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும்.

சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் 13ம் தேதி வரையில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். மேலும் தென்மேற்கு வங்கக் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.