Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

தென்னிந்திய பகுதியின் மேல் வளிமண்டல சுழற்சி தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் நேற்று அனேக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. வெப்பநிலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை. இந்நிலையில், மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அத்துடன் குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. இந்த வானிலை நிகழ்வுகளின் காரணமாக இன்றும் அனேக இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. குறிப்பாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும். 10ம் தேதி நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இதேநிலை 12ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 12ம் தேதியில் 20 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதனால் மேற்கண்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று வானம் ஓரளவுக்கு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. மேலும், தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று முதல் 12ம் தேதி வரையில், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கிமீ வேகத்தில் வீசும். அதனால் மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.