Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தென் ஆப்பிரிக்காவுடன் முதல் டி 20 போட்டி சஞ்சு சாம்சன் அதிரடியில் இந்தியா அபார வெற்றி

டர்பன்: இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 4 போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது ஆட்டம் தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்க அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா களமிறங்கினர். அபிஷேக் சர்மா 7 ரன்களில் அவுட்டானதால், பின்னர் களமிறங்கிய கேப்டன் சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சனுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் அதிரடி ஆட்டத்தை வௌிப்படுத்திய நிலையில் கேப்டன் சூர்ய குமார் யாதவ் 21 ரன்களில் வௌியேறினார். தொடர்ந்து விளையாடிய திலக் வர்மா 18 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் 7 பவுண்டரிகள், 10 சிக்சர்கள் விளாசி 107 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது.

203 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் 2 பவுண்டரிகள் எடுத்த தென்னாப்பிரிக்காவின் மார்க்ரம் அதே ஓவரில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த ஸ்டப்ஸ் ஆவேஷ்கானின் பந்து வீச்சில் சரிந்தார். ஆட்டேநேர முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி, 61 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டார்.