ஹராரே: ஜிம்பாப்வேயில், முத்தரப்பு `டி-20’ தொடர் நடக்கிறது. இதில் ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து அணிகள் விளையாடுகின்றன. ஹராரேயில் நடந்த முதல் போட்டியில் ஜிம்பாப்வே, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியில் பிரையன் பென்னட் 30, ரியான் பர்ல் 29 ரன் எடுத்தனர். அபாரமாக ஆடிய கேப்டன் சிக்கந்தர் ராஜா (54*) அரைசதம் கடந்தார். ஜிம்பாப்வே 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 141 ரன் எடுத்தது. தென் ஆப்ரிக்கா சார்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணியில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 11, வான் டெர் துசென் 16 ரன்னில் அவுட்டாகினர். பொறுப்பாக ஆடிய ரூபின் ஹெர்மன் 45, டிவால்ட் பிரவிஸ் 41 ரன் எடுத்தனர். தென் ஆப்ரிக்க அணி 15.5 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 142 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கார்பின் போஷ் (22), ஜார்ஜ் லிண்டே (4) அவுட்டாகாமல் இருந்தனர்.


