பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்கள் உள்ளன. இவற்றின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் செல்லும்போது எந்த வித சப்தமும் இரைச்சலும் வருவதில்லை. இதனால், இந்த வாகனம் வருவதை பாதசாரிகள், பிற வாகன ஓட்டிகள் உணர முடியாததால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதை தடுக்க அனைத்து மின்சார வாகனங்களிலும் செயற்கை ஒலி எச்சரிக்கை அமைப்பு பொருத்துவதை ஒன்றிய அரசு கட்டாயமாக்க உள்ளது.
இதன்படி 2026 அக்டோபர் 1ம் தேதிக்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும் அனைத்து வாகனங்களிலும் செயற்கை ஒலி எழுப்பும் எச்சரிக்கை அமைப்பு (ஏவிஏஎஸ்) இடம் பெறுவது கட்டாயம். ஏற்கெனவே உள்ள எலெக்ட்ரிக் வாகனங்களில் 2027 அக்டோபர் 1ம் தேதிக்குள் இதனை நிறுவ வேண்டும் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.