Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சினிமாவில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கத்தியால் கழுத்தறுத்து தாயை கொன்ற மகன்

திருமலை: சினிமாவில் நடிக்க எதிர்ப்பு தெரிவித்த தாயை கழுத்தறுத்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரோதட்டூரை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவரது மனைவி லட்சுமிதேவி. மகன் யஷ்வந்த்குமார் (25). விஜயபாஸ்கர் ஒயின்ஷாப்பில் வேலை செய்கிறார். லட்சுமிதேவி ஈஸ்வர்ரெட்டி நகரில் உள்ள மண்டல பரிஷத் பள்ளி ஆசிரியை. பி.டெக் முடித்துள்ள யஷ்வந்த்குமாருக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ஐதராபாத்தில் தங்கி சினிமா சான்சுக்கு முயற்சித்து வருகிறார். ஆனால் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் யஷ்வந்த்குமாருக்கு சிறிது காலமாக மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஐதராபாத்தில் இருந்து வீடு திரும்பிய யஷ்வந்த்குமார், தனது தந்தை தூங்கிக் கொண்டிருந்த அறையை பூட்டினாராம். வீட்டு சமையலறையில் சமையல் செய்து கொண்டிருந்த தாய் லட்சுமிதேவியின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். பின்னர் சடலத்தை வெளியே இழுத்து வந்து போட்டுள்ளார். அதன்பின்னர் யஷ்வந்த்குமார் வீட்டு ஹாலில் அமர்ந்து தனது மொபைல் போனில் பக்தி பாடல்களை கேட்டுக்கொண்டிருந்தாராம். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து யஷ்வந்த்குமாரை கைது செய்து விசாரித்தனர். இதில் பி.டெக் படித்துவிட்டு சினிமாவுக்கு செல்ல வேண்டாம். ஏதாவது வேலை செய் என்று தாய் லட்சுமிதேவி கூறுவாராம். இதுதொடர்பாக தாய், மகனிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக தாயை கொலை செய்தாரா, அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.