சூரிய மின் உற்பத்தியை முழுமையாக பயன்படுத்தினால் தமிழ்நாட்டின் மின் தேவையை இன்னும் 5 ஆண்டுகளில் பூர்த்தி செய்ய முடியும்: ஆய்வில் தகவல்
சென்னை: தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தியை முழுமையாக பயன்படுத்தினால் இன்னும் 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் தொழில்நுட்பம், கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு ஊக்குவிப்பு திட்டங்கள், சூரிய மின்சக்தி திட்டங்களை அமைப்பதற்கான சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி விலக்குகள் ஆகியவை இத்துறையின் வளர்ச்சிக்கு வழிவகுத்துள்ளன.
இந்நிலையில் ஐ.நா.சபையின் ஆதரவுடன் செயல்படும் அரோவில் கன்சல்டிங் என்ற என்ஜிஓ நடத்திய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த ஆய்வின்படி, தமிழ்நாட்டில் 1.29 லட்சம் மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்ய முடியும். இதை முழுமையாக பயன்படுத்தினால், இன்னும் ஐந்து வருடத்தில் தமிழ்நாட்டின் மின் தேவை முழுவதையும் பூர்த்தி செய்யலாம். ஆனால், தற்போது தமிழ்நாட்டில் 10,656 மெகா மெகாவாட் மட்டுமே சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது மொத்த உற்பத்தியில் 0.78%மட்டுமே.
முழு சூரிய மின்சக்தி திறனையும் பயன்படுத்தினால், ஒரு வருடத்தில் 203.67 டிரில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இது 2030-31ம் ஆண்டிற்கான மின் தேவையை விட அதிகம். 2034ம் ஆண்டில் கூட, இது மின் தேவையில் 87 சதவீதம் பூர்த்தி செய்யும். ஆனால் இதுவரை 1.66% கூரை சூரிய மின்சக்தி திறன் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதே நிலைமை இருந்தால் செய்யப்பட்ட உற்பத்தி இது 2030-31ம் ஆண்டில் பாதி மின் தேவையை மட்டுமே பூர்த்தி செய்ய முடியும். எனவே சூரிய மின்சக்தி உற்பத்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். மேலும் பேட்டரி சேமிப்பு அமைப்புகள் இல்லாமல் முழு சூரிய மின்சக்தி பயன்படுத்துவது சாத்தியமில்லை. இதை கருத்தில் கொண்டு அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.