வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் கணினி பயிற்சி மையத்தில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காந்தி நகர் மெயின் ரோட்டில் தனியார் கணினி பயிற்சி மையம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். நேற்று மதியம் மையத்தின் உள்பகுதியிலுள்ள வாஷ்பேசினில் மாணவி ஒருவர் கை கழுவ சென்றார். அப்போது வாஷ்பேசினில் சாரை பாம்பு ஒன்று பதுங்கியிருப்பதை பார்த்த அவர், அங்கிருந்து அலறியடித்தபடி வெளியே ஓடினார்.
அவரைத் தொடர்ந்து அங்கிருந்த சகமாணவிகளும் வெளியேறினர். தகவலறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேஷ் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள், வாஷ்பேசினில் பதுங்கியிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அதனை அருகில் உள்ள வனப்பகுதியில் பத்திரமாக விடுவித்தனர்.