சூரத்: குஜராத்தில் பல்கலைக்கழகத்தின் தேர்வின்போது ஸ்மார்ட் வாட்ச் ஏஐ பயன்படுத்தி காப்பி அடித்த இரண்டு மாணவர்கள் சிக்கினார்கள். குஜராத்தின் சூரத்தில் உள்ள வீர் நர்மத் தெற்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் புதனன்று நடந்த தேர்வின்போது பிசிஏ மாணவர்கள் தங்களது கையில் கட்டியிருந்த ஸ்மார்ட் வாட்சில் இருந்து எதையோ படிப்பதை தேர்வு மேற்பார்வையாளர் பார்த்துள்ளார்.
அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து மேற்பார்வையாளர் அவர்களை சோதனை செய்துள்ளார். அப்போது ஸ்மார்ட் வாட்ச்சில் இருந்த ஏஐ மூலமாக தேர்வில் அவர்கள் இருவரும் காப்பி அடித்தது தெரியவந்தது. தேர்வின்போது முறைகேட்டில் ஈடுபட்டதற்காக இரண்டு மாணவர்களுக்கும் பல்கலைக்கழக நிர்வாகம் தலா ரூ.5000 அபராதம் விதித்தது. மேலும் செல்போன்கள் எடுத்துவர ஏற்கனவே தடை உள்ள நிலையில் ஸ்மார்ட் வாட்ச், இயர்பட்ஸ், எலக்ட்ரானிக் பேனா உள்ளிட்டவற்றை எடுத்துவருவதற்கும் தடை விதித்து புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

