ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
தாம்பரம்: ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டியில் தமிழக மாணவர்கள் 22 சதவீதம் வெற்றிபெற்று இருப்பது பெருமிதத்தை அளிக்கிறது என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். அகில இந்திய தொழில்நுட்ப கழகம் சார்பில், இந்திய அளவில் 60 மையங்களில் ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகள் நடைபெற்றது. நாடு முழுவதும் அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 275 பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக 1800 மாணவர்கள் கொண்ட குழுவினர் போட்டிகளில் பங்கேற்றனர். மேற்கு தாம்பரத்தில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடந்த போட்டிகளில் 200 மாணவர்கள் 20 குழுக்களாக கலந்து கொண்டனர்.
இதையடுத்து போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி சாய்ராம் கல்லூரி தலைவர் சாய் பிரகாஷ் லியோமுத்து தலைமையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்துகொண்டு, மாணவர்களின் ஆராய்ச்சி குறித்து கேட்டறிந்து ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டிகளில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.இதையடுத்து நிருபர்களிடம் அவர் கூறியது: தமிழ்நாடு முதலமைச்சர் கல்விக்கும், அதன் மூலம் வரும் வளர்ச்சிக்கும் மிகுந்த முக்கியத்துவத்தை கொடுப்பவர்.
தமிழ்நாடு உற்பத்தி மட்டுமல்லாது, ஆராய்ச்சி துறையில் மிகப்பெரிய அடிஎடுத்து வைத்துக்கொண்டிருக்கிறது. இந்திய அளவில் 1800 அணிகள் கலந்து கொண்டு நடைபெற்ற ஸ்மார்ட் இந்தியா ஹேக்கதான் போட்டிகளில் தமிழ்நாடு கல்லூரி அணிகள் 22 சதவீதம் வெற்றிபெற்றுள்ளனர். இந்தியா முழுக்க நடந்த போட்டிகளில் 6 சதவீத மக்கள் தொகை கொண்ட தமிழ்நாடு மாணவர்கள் 22 சதவீதம் வெற்றிபெற்றிருக்கிறார்கள் என்றால், கல்வியில் சிறந்தது தமிழ்நாடு என்று நாம் எல்லோரும் மார்தட்டி சொல்லிக் கொண்டிருக்கிறோமே அதன் விளைவுதான் மாணவர்கள் தேர்வாகியிருக்கிறார்கள்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று சொல்வதால்தான் அதிகப்படியான வெற்றிகிடைத்திருக்கிறது. இந்த ஹேக்கத்தான் மூலம் படிப்பில் இருந்து அடுத்த கட்டமாக செயல் வடிவமாக ஆராய்ச்சிக்கு போகிறவர்கள் புதிய அடியை எடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இதுபோன்ற ஹேக்கத்தான்களை நாம் தமிழ்நாட்டிலும் செய்து கொண் டிருக்கிறோம். இந்திய அளவில் நமது மாணவர்கள் தொடர்ந்து வெற்றிபெறுவதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார்.


