Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்

* சில சமயம் அடுப்பில் வைத்தக் கடாயில் தண்ணீர் காய்வதற்கு முன்பே எண்ணெயை ஊற்றி விடுவோம். அவ்வளவுதான்! எண்ணெய் படபடவென்று பொரிந்து மேலேச் சிதறும். உடனடியாக ஒரு சின்ன புளிக்கொட்டை அளவு புளியை எடுத்துப் போட்டால் எண்ணெய் தெரிப்பது உடனே நிற்கும்.

* எந்த வறுவல் செய்வதாக இருந்தாலும் கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடு செய்வோம். அந்தச் சூடான எண்ணெயில் கொஞ்சமாக சர்க்கரைச் சேர்த்து பிறகு காய்கறிகளைச் சேர்த்து வறுவல் செய்தால், டேஸ்ட் சூப்பராக இருக்கும்.

* காய்கறிகள் ¾ பாகம் வெந்தவுடன் உப்புச் சேர்த்து சமைத்தால் அப்போது தான் காய்கறிகளில் இருக்கும் இரும்புச் சத்து முழுமையாக நமக்கு கிடைக்கும்.

* வெறும் ஏலக்காய்களை ஒரு கவரில் போட்டு சுருட்டி ஃபிரீசரில் ½ மணி நேரம் வைத்து, அதன் பிறகு அந்த ஏலக்காய்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சலித்து எடுத்தால் சர்க்கரை போடாத சூப்பரான ஏலக்காய் பொடி கிடைக்கும். மீதம் இருக்கும் திப்பிகளை அப்படியே தூக்கி டீ தூளில் கொட்டிக் கலந்தால், டீ போடும் போது வாசம் இருக்கும்.

* சீரகம், ஓமம், மிளகு இந்த மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக கடாயில் வறுத்து இதோடு கொஞ்சம் சுக்குப் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்து அரைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொண்டு எந்த சுண்டல் செய்யும் போதும், தாளிக்கும் போதும் தேவையான அளவு போட்டு சுண்டல் தாளித்துக் கொடுத்தால் வாயுத் தொல்லை, வயிறு உப்புசம், ஜீரணக் கோளாறு போன்ற பிரச்னைகள் வரவே வராது.

* அரைத்த இஞ்சி, பூண்டு விழுதை ஒரு கிண்ணத்தில் போட்டுச் சூடான ஒரு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்து கொஞ்சம் நேரம் ஆறவிட்டு ஃபிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு இஞ்சி, பூண்டு விழுது கெடாமல் ப்ரெஷ்ஷாக அப்படியே இருக்கும்.

* ஓட்டலில் கிரேவி, சூப் இவைகளில் எல்லாம் ப்ரஷ்க்ரீம் சேர்ப்பார்கள். அதற்கு பதில் நீங்கள் சிறிதளவு வெண்ணெயை பாலோடுக் கலந்து பாருங்கள். உங்கள் வீட்டில் வைக்கும் சூப், கிரேவி எல்லாம் சூப்பர் சுவையாய் இருக்கும்.

* சாதம் வடிக்கும் போது சில நேரங்களில் சாதத்தில் தண்ணீர் ஒட்டிக் கொண்டு இருக்கும். அப்படி ஒட்டிக் கொண்டு இருந்தால் சாப்பிடும்போது சாதம் அவ்வளவு ருசியாக இருக்காது. இதற்கு வடித்த சாதத்தை ஒரு பாத்திரத்துக்கு மாற்றி அதன் மேல் 2 பிரெட் துண்டை வைத்து மூடவும். 5 நிமிடங்கள் கழித்து எடுத்தால் சாதத்தில் இருக்கும் ஈரம் அனைத்தும் பிரெட் உறிஞ்சி விடும். சாதமும் நல்ல உதிரி உதிராக இருக்கும்.

* குழம்பு வைக்கும் போது நாம் தேங்காயை முதலிலேயே அரைத்து ஊற்றி விடாமல் கடைசியாக இறக்கும் போது ஊற்றி ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விட்டால் குழம்பின் ருசி பிரமாதமாக இருக்கும். தேங்காயின் சத்தும் நமக்கு முழுமையாகக் கிடைக்கும்.

- N. குப்பம்மாள்