* அறைக்கு நடுவே ஒரு ஸ்டூலில் நனைத்த டவலை போட்டு வைத்தால் ஃபேன் காற்றில் குளிர்ச்சி பரவி அறையில் ஏசி போட்டது போல இருக்கும்.
* உயரமான பாட்டிலில் ஊறுகாய் போட்டு வைத்தால் பாட்டிலின் அடியில் உள்ள ஊறுகாய் அதிக நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.
* புடவை ஜரிகை மங்கி விட்டதா? கவலை வேண்டாம். அமோனியா கலந்த தண்ணீரில் ஒரு துணியை முக்கி, பார்டர் ஜரிகையில் லேசாக துடைத்தால் போதும் ஜரிகை பளிச்சிடும்.
* வாஷிங் மெஷின் பிளக்கை கண்டிப்பாக அடாப்டர் பின் அல்லது எக்ஸ்டன்ஷன் பின்னோடு பொருத்தக் கூடாது. இதனால் எர்த் கிடைக்காமல் ஷாக் அடிக்கலாம்.
* குண்டூசி டப்பாவுக்குள் சாக்பீஸை நுணுக்கிப் போட்டால் குண்டூசி துரு பிடிக்காமல் இருக்கும்.
* பட்டுப்புடவையில் எண்ணெய் சிந்திவிட்டால், அந்த இடத்தில் விபூதியை நன்கு தேய்த்து விட்டு, பிறகு உதறினால் எண்ணெய்க் கறை காணாமல் போகும்.
* ஈ தொல்லையா? கொதிக்கும் தண்ணீரில் சர்க்கரையை கரைத்து அதில் ஒரு அட்டையை நனைத்து தொங்க விட்டால் ஈக்கள் அதில் போய் ஒட்டிக் கொள்ளும்.
* படுக்கை விரிப்புகளையும், திரைச்சீலைகளையும் அடர்த்தியான நிறங்களில் தேர்வு செய்யாதீர்கள். அவை மனதில் எரிச்சலை உண்டுபண்ணும்.
* குழம்பு, சாம்பார் தாளிக்கும்போது, சமையல் எண்ணெயுடன் சில துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்தால் நம் உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கும்.
* வெளிநாட்டுக்கு அனுப்பும் தபால்கள், பார்சல்களில் முகவரி அழியாமல் இருக்க வாக்ஸ் பாலிஷை முகவரி மீது தடவுங்கள்.
* இரவில் ரசம் மீந்துவிட்டால் பித்தளைப் பாத்திரங்களின் மேல் ஊற்றி ஊறவைத்து தேய்த்தால் பாத்திரம் பளிச்சிடும்.
* காப்பர் பாட்டம் பாத்திரம் மங்கிவிட்டால் கொஞ்சம் வினிகரையும், உப்பையும் பாத்திரத்தின் மேல் பூசி துணியால் அழுத்தி தேய்த்தால் பாலீஷ் ஏறி மின்னும்.
* காய்கறி சீவியை கழுவும் முன்பு பல் தேய்க்கும் பிரஷ்ஷால் தேய்த்தால் அதிலுள்ள துகள்கள் நீங்கும்.
* பூட்டு துரு பிடித்து விட்டால் சாவிக்கு எண்ணெய் போட்டால் போதும். எளிதில் திறக்க வரும்.
* கண்ணாடிப் பொருட்களை ஒரு துண்டு உருளைக் கிழங்கால் நன்கு தேய்த்து துடைத்தால் பளபளக்கும்.
* பால் பாத்திரங்களின் அடியில் ஒட்டிக்கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* கற்பூரத்தை நுணுக்கி தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து வாரம் ஒரு முறை டைனிங் டேபிளைத் துடைத்தால் துர்நாற்றம் நீங்கும்.
* ஆரஞ்சு பழத்தோலை காய வைத்து நெருப்பில் சுட்டு வீட்டின் ஒரு ஓரத்தில் வைத்தால் போதும். கொசுக்கள் எல்லாம் வெளியே தெறித்தோடும்.
* டூத் பிரஷ்ஷை வாரம் ஒரு முறை வெந்நீரில் ஊறவைத்து கழுவி உபயோகிக்க வேண்டும். இது ஆரோக்கியத்திற்கு நல்லது.
- அ. யாழினி பர்வதம்.