Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சிறுமுகை வனப்பகுதியில் அழுகி காய்ந்த நிலையில் சடலம் மீட்பு

* இறந்தது ஆணா, பெண்ணா? டிஎஸ்பி விசாரணை

மேட்டுப்பாளையம் : சிறுமுகை வனப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க சடலத்தை அழுகி காய்ந்த நிலையில் மீட்டு டிஎஸ்பி விசாரணை நடத்தினார். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் களைச்செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது. அங்கு சென்று பார்த்த போது சடலம் ஒன்று இருந்தது.

உடனடியாக வனத்துறையினர் இதுகுறித்து சிறுமுகை போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறுமுகை இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையிலான போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத அழுகி காய்ந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக அவர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமானுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

விரைந்து வந்த டிஎஸ்பி அதியமான் தலைமையிலான போலீசார் மற்றும் கோவையில் இருந்து வந்த தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்தில் மாதிரிகளை சேகரித்தனர். மேலும், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சிறுமுகை போலீசார், இறந்தது ஆணா, பெண்ணா என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 தனிப்படைகள் அமைப்பு

சிறுமுகை வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சடலம் அழுகி காய்ந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து கோவை எஸ்பி கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம் டிஎஸ்பி அதியமான் தலைமையில் சிறுமுகை இன்ஸ்பெக்டர் அம்பிகா மேற்பார்வையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து போனது ஆணா? பெண்ணா? என்பது கூட உடனடியாக கண்டறிய இயலவில்லை. இந்நிலையில் இறந்தவருக்கு சுமார் 35 வயது இருக்கலாம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக வனப்பகுதிக்குள் வந்தார்? வன வேட்டை கும்பலை சேர்ந்தவரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.