மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே பிடிபட்ட சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை ஜீவா நகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதியை ஓட்டி உள்ள பள்ளம் பகுதியில் நேற்றிரவு பாம்பு ஒன்று இருப்பதை அவ்வழியே சென்ற பொதுமக்கள் கண்டு அச்சமடைந்தனர். உடனடியாக இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் குமாருக்கு தகவல் அளித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வேட்டை தடுப்பு காவலர்கள் பூபதி மற்றும் யுவராஜ் இருவரும் அங்கு மலைப்பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டனர். தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் அங்கு புதரில் மறைந்திருந்த சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை நீண்ட நேரம் போராடி லாவகமாக பிடித்தனர். பின்னர், அதனை வனச்சரகர் மனோஜ் குமார் அறிவுறுத்தலின் பேரில் அடர்ந்த வனப்பகுதியில் விடுவித்தனர். குடியிருப்பு பகுதியில் மலைப்பாம்பு பிடிபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.