Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆரை கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் வரும் 11ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி கட்சிகள் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆரை கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் வரும் 11ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டம் நடபெறும் என்று திமுக கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளன. மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்,

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் எஸ்.ஐ.ஆருக்கு தொடக்கம் முதலில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றிய அரசின் கைப்பாவையாகவும், எதேச்சதிகாரப் போக்குடனும் தேர்தல் ஆணையம் செயல்பட்டு தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு (எஸ்.ஐ.ஆர்) கொண்டு வந்துள்ளது.

சிறுபான்மையினர் வாக்குகள், பாஜவின் எதிர்ப்பு வாக்குகள் ஆகியவற்றை குறிவைத்து நீக்கும் நோக்கோடு தகுதியுள்ள வாக்காளர்களை நீக்கி, தகுதியற்ற வாக்காளர்களைச் சேர்க்கும் சதித் திட்டத்தோடு ஒன்றிய பா.ஜ அரசை தனக்குப் பாதுகாவலாக வைத்துக் கொண்டு தேர்தல் ஆணையம் இதனை செய்திட முயன்றிருப்பதோடு, பீகார் மாநிலத்தில் நடந்த குளறுபடிகள் எதையும் களையாமல் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர் திட்டத்தைச் செயல்படுத்துவது மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதாகவும், ஜனநாயகத்தை அடியோடு குழி தோண்டி புதைப்பதாகவும் உள்ளது.

அத்துடன் தேர்தல் ஆணையத்தின் அவசரமே அதிக சந்தேகத்தை எழுப்புகிறது. சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள உண்மையான வாக்காளர்களின் பெயர்களை பட்டியலில் இருந்து நீக்க தேர்தல் ஆணையம் திட்டமிடுகிறது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையின் உச்ச காலமான, கனமழை மற்றும் மோசமான வானிலை எதிர்பார்க்கப்படும் காலத்தில் தமிழ்நாடு வாக்காளர்களில் பெரும்பாலோர் கிராமப்புற மக்களாக- விவசாயிகளாக இருப்பதால், கணக்கீட்டு படிவங்களைப் பெற்று நிரப்பி, திருப்பி அளிக்க நேரம் கிடைக்காது.

இந்த செயல்முறையில் பெரும் எண்ணிக்கையில் வாக்காளர்கள் நீக்கப்படுவர். அதோடு, வருவாய்த் துறையும் கனமழையால் எழும் சூழ்நிலைகளை கையாள்வதில் ஈடுபட வேண்டும். எனவே, இந்த காலம் கணக்கீட்டுக்கு உகந்த காலம் இல்லை என்று மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் தனித்தனியே அறிக்கை விடுத்தும் அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இந்த எஸ்.ஐ.ஆர்.ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல.

* மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்தவாறே கடந்த 4ம் தேதியிலிருந்து இன்று வரை களத்தில் எஸ்.ஐ.ஆர், பெரும்பாலான வாக்காளர்கள் நீக்கப்படும் அச்சத்தை உறுதிப்படுத்துகிறது.  பிஎல்ஓக்களும்- பிஎல்ஏ2க்களுக்கும் இடையே சரியான தகவல் தொடர்புகளை ஏற்படுத்தவில்லை. அவர்கள் ஒருங்கிணைக்கப்படவில்லை.

* சில இடங்களில், குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் பிஎல்ஓக்கள் கணக்கீட்டு படிவத்தை ஒரு நாளிலேயே பூர்த்தி செய்து தர வலியுறுத்துகிறார்கள்.

* தேர்தல் ஆணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள 2002/2005 வாக்காளர் பட்டியல்கள் குழப்பம் விளைவிப்பதாகவும் அமைந்துள்ளன. எனவே, இந்த எஸ்.ஐ.ஆர். சீராய்வை தேர்தல் ஆணையம் உடனே கைவிடும்படி தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் விடுத்தும் ஒன்றிய பாஜ அரசின் கைப்பாவையாக மாறி, எதேச்சதிகாரப் போக்கில் இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வு கொண்டு வந்துள்ளதை கண்டித்து ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி’யின் சார்பில் வருகிற 11ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட தலைநகரங்களில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும்.