எஸ்ஐஆர். மூலம் ‘இந்தியா’ கூட்டணி வென்ற தொகுதிகளில் வாக்குகளை நீக்க பாஜ பகிரங்க சதி: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் எஸ்ஐஆர். மூலம் ‘இந்தியா’ கூட்டணி வென்ற தொகுதிகளில் வாக்குகளை நீக்க பாஜ பகிரங்க சதியில் ஈடுபட்டுள்ளதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் 2ம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி (எஸ்ஐஆ) நடந்து வருகிறது. இதற்கான பணியில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டு வருகிறது. இந்த பணிகளை சமாஜ்வாடி தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து லக்னோவில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘உத்தர பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தேர்தல் கமிஷனுடன் இணைந்து பாஜ மிகப்பெரிய திட்டத்தை தீட்டி வருவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதாவது கடந்த 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாடியும், ‘இந்தியா’ கூட்டணியும் வெற்றி பெற்ற இடங்களில், ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை நீக்க முடிவு செய்துள்ளனர். எனவே நாங்கள் உஷாராக இருக்கிறோம். நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் உத்தர பிரதேசத்தில் பாஜ தோல்வியடைந்ததால் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மூலம் சதியில் இறங்கி இருக்கிறது’ என்றார்.


