Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (5.8.2025) மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி. அடையாறு மண்டலம், ராஜா அண்ணாமலையுரம், நாராயணசாமி தோட்டத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுடன் கூடிய கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை திறந்து வைத்தார்.

நாராயணசாமி தோட்ட சென்னை நடுநிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 8 ஆம் வகுப்பு வரை 119 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் ஏற்கனவே அமைந்திருந்த பழுதடைந்த பள்ளிக் கட்டடம் மற்றும் இரண்டு அங்கன்வாடி குழந்தைகள் மையக் கட்டடங்களை இடித்துவிட்டு, சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் வாயிலாக 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23,630 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன். இரண்டு அங்கன்வாடி குழந்தைகள் மையங்களுடன் கூடிய கூடுதல் பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

கூடுதல் பள்ளிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் தலைமையாசிரியர் அறை, 2 வகுப்பறைகள், 2 அங்கன்வாடி குழந்தைகள் மையக் கட்டடங்கள். சமையலறை, ஆகியவையும், முதல் தளத்தில் 9 வகுப்பறைகள், கணிப்பொறி ஆய்வுக்கூடம், ஆசிரியர் ஓய்வறை ஆகியவையும், இரண்டாம் தளத்தில் 9 வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடம். ஆசிரியர் ஓய்வறை ஆகிவற்றுடன் 2 நூலகங்கள், வாசிப்பு இயக்க நூலகம் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறைகளுடன் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், இணை ஆணையாளர் (கல்வி) (பொ) வி.சிவகிருஷ்ணமூர்த்தி இ.ஆ.ப., தெற்கு வட்டார துணை ஆணையாளர் .அஃதாப் ரசூல், இ.ஆ.ப., நிலைக்குழுத் தலைவர் நே.சிற்றரசு (பணிகள்), மண்டலக்குழுத் தலைவர் ஆர்.துரைராஜ் மாமன்ற உறுப்பினர் கீதா முரளி, அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.