சென்னை: சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவி முதலிடம் பிடித்துள்ளார். சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2025-26ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் விண்ணப்பிப்பது ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 14ம் தேதி நிறைவடைந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். நேற்று கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் தகுதியானவர்களின் தரவரிசை பட்டியல்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
துறை செயலாளர் செந்தில்குமார், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் விஜயலட்சுமி, இணை இயக்குநர் மணவாளன், தேர்வுக்குழு செயலர் கரோலின், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நாராயணசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தரவரிசை பட்டியல்கள் https://tnhealth.tn.gov.in/ என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பார்த்து தெரிந்து கொள்ளலாம். கலந்தாய்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
* கன்னியாகுமரி மாவட்ட மாணவி முதலிடம்
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 4,371 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில், நீட் தேர்வில் 720க்கு 520 மதிப்பெண் எடுத்த கன்னியாகுமரி மாவட்ட மாணவி பிரகதி முதலிடம் பெற்றுள்ளார். 512 மதிபெண்களுடன் இனிய சுதர்சன் இரண்டாம் இடத்தையும், 509 மதிப்பெண்களுடன் பாவேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 1,430 பேரும், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 1,860 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
* 7.5% ஒதுக்கீட்டில்
அரசு ஒதுக்கீட்டுக்கு மொத்தம் உள்ள இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 97 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் 958 இடம் பெற்றுள்ளனர். இதில், 425 மதிப்பெண்களுடன் ஜி.பாவனா முதலிடத்தையும், 423 மதிப்பெண்களுடன் என்.அருண்குமார் இரண்டாம் இடத்தையும், 417 மதிப்பெண்களுடன் எஸ்.அன்பரசி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.