Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் சாத்தூர், போடிநாயக்கனூர் தொகுதி நிர்வாகிகளுடன் இன்று முதல்வர் ஆலோசனை: தகுதியானவர்கள் இருப்பின் கலைஞர் உரிமைத் தொகை பெற உதவிட முதல்வர் அறிவுரை

சென்னை: உடன்பிறப்பே வா நிகழ்ச்சியில் இன்று சாத்தூர், போடி நாயக்கனூர் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது தகுதியானவர்கள் இருப்பின் கலைஞர் உரிமை தொகை பெற உதவிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள், பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அரசு திட்ட பணிகளை தொடங்கி வைக்க மாவட்டங்களுக்கு செல்லும்போது திமுகவினரிடமும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதுமட்டுமின்றி உடன்பிறப்பே வா’ என்ற தலைப்பில் தொகுதிவாரியாக முக்கிய திமுக நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து வந்து, அவர்களிடம் தனித்தனியே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த நிகழ்வின் போது, ஒவ்வொரு சட்டமன்றம் வாரியாக பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரை அழைத்து முதல்வர் குறைகளையும், தொகுதி நிலவரத்தையும் கேட்டு வருகிறார்.

இதனால், இதுவரை செய்வதறியாது, உண்மையை கட்சி தலைமைக்கு சொல்ல முடியாமல் தவித்த நிர்வாகிகளுக்கு, கட்சி தலைவரிடமே நேரடியாக தங்களது குறைகளையும் நிறைகளையும், தொகுதியின் தற்போதைய நிலவரத்தையும் கட்சி தலைவரிடமே தெரிவிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் சாத்தூர், போடிநாயக்கனூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நடத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனையின் போது தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து அவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். மேலும், கலைஞர் உரிமைத் தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருப்பின் அவர்கள் உரிமைத் தொகை பெறும் வகையில் கட்சியினர் உதவிட வேண்டும் என்றும் அவர்களிடம் முதல்வர் அறிவுறுத்தினார்.