சென்னை: பெண் ஒருவர் கூறிய பாலியல் புகாருக்கு நடிகர் விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ரம்யா மோகன் எனும் பெண் ஒருவர் எக்ஸ் தள பக்கத்தில் இருந்து சில பதிவுகள் போட ஆரம்பித்தார். அதில், கோலிவுட்டின் காஸ்டிங் கவுச் சம்பவங்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் தொடர்பு இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக ஒரு பெண் விஜய் சேதுபதியால் பயன்படுத்தப்பட்டதாகவும், இப்போது அந்த பெண் மறுவாழ்வு மையத்தில் இருப்பதாகவும் அந்த பதிவில் பகிரப்பட்டிருந்தது.
விஜய் சேதுபதி, கேரவனுக்கு வருவதற்காக அந்த பெண்ணுக்கு ரூ.2 லட்சத்தையும், கேரவன் ஓட்டுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் தருவதாகவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது வைரலான சில மணி நேரங்களில், அந்த பதிவு சம்பந்தப்பட்ட பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதற்கு மீண்டும் விளக்கம் கொடுத்த ரம்யா மோகன், சம்பந்தப்பட்ட பெண்ணின் பாதுகாப்பிற்காக இந்த பதிவுகளை நீக்குவதாக குறிப்பிட்டிருந்தார்.இது குறித்து விஜய் சேதுபதி கூறியது: என்னை பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்கு கூட, இது உண்மை இல்லை என்று தெரியும்.
அவர்களே இதை பார்த்தால் சிரிப்பார்கள். எனக்கும் என்னைப் பற்றி தெரியும். இது போன்ற அசிங்கமான குற்றச்சாட்டுகள் என்னை பாதிக்காது. என்னை சேர்ந்தவர்களும், எனது குடும்பத்தினரும் இதனால் மன உளைச்சளுக்கு ஆளாகியிருக்கின்றனர். இதை அப்படியே விட்டுவிடுங்கள். அந்த பெண் தன்னை பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக இப்படி செய்கிறார். இதனால் அவருக்கு சில நிமிடங்கள் புகழ் கிடைக்கிறது, அதை அனுபவித்துக்கொள்ளட்டும். இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார். இது குறித்து சைபர் கிரைமில் விஜய் சேதுபதி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.