Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போலி செய்தி வெளியிட்டதாக மேற்குவங்க முதல்வர் மீது போலீசில் புகார்; டெல்லி காவல்துறை விசாரணை

புதுடெல்லி: டெல்லியில் வங்கமொழி பேசும் பெண் தாக்கப்பட்டதாக முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்ட செய்தி போலியானது எனக்கூறி அவர் மீது பா.ஜ.க. எம்.பி. டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். நாடு முழுவதும் பிற மாநிலங்களில் புலம்பெயர்ந்து வாழும் வங்கமொழி பேசும் மக்கள், குறிப்பாக தொழிலாளர்கள், பாகுபாட்டிற்கு உள்ளாக்கப்பட்டு வன்முறையைச் சந்தித்து வருவதாக மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளி ஒருவரின் மனைவியையும், குழந்தையையும் டெல்லி போலீசார் கொடூரமாகத் தாக்கியதாக அவர் சமூக வலைதளத்தில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தார். டெல்லி போலீசார் தனது குற்றச்சாட்டை மறுத்த பிறகும், ‘நான் கணித்தது போலவே அந்தத் தாயும் சேயும் அச்சுறுத்தப்பட்டு, ஒரு காவல் நிலையத்திலிருந்து மற்றொரு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். யார் சொல்வது உண்மை, யார் சொல்வது பொய் என்பது விரைவில் நிரூபிக்கப்படும்’ என மம்தா பானர்ஜி சவால் விடுத்தார்.

இந்நிலையில், மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் சகோதரரும், காந்தி தொகுதி பாஜக எம்பியுமான சவுமேந்து அதிகாரி, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மீது டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘டெல்லி காவல்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும், மக்கள் மத்தியில் அதிருப்தியைத் தூண்டி சமூகங்களுக்கிடையே நல்லிணக்கத்தைக் குலைக்கவும், முதல்வர் மம்தா பானர்ஜி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் போலியான, புனையப்பட்ட மற்றும் பிரிவினையைத் தூண்டும் வகையிலான செய்தியைப் பரப்பி வருகிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த டெல்லி காவல்துறை மூத்த அதிகாரி அபிஷேக் தானியா, ‘விசாரணையில், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்தப் பெண் கூறிய கதை முற்றிலும் ஆதாரமற்றது. மேற்குவங்கத்தின் மால்டா மாவட்டத்தில் வசிக்கும் தனது உறவினரான அரசியல் கட்சிப் பிரமுகரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த ஆதாரமற்ற காணொலியைத் தயாரித்து அவருக்கு அனுப்பியதாக அந்தப் பெண் ஒப்புக்கொண்டுள்ளார்’ என்று தெரிவித்தார்.