Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா கோலாகலம்: ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக பங்கேற்பு

வேலூர்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா பக்தர்களின் வெள்ளத்தில் கோலாகலமாக நடைபெற்றது. குடியாத்தம் கோபாலபுரம் மகா நதிக்கரையில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் நடப்பாண்டிற்கான சிரசு திருவிழா நடைபெற்றது. தரனம்பேட்டையில் உள்ள முத்தய்யாளம்மன் கோயிலில் இருந்து கெங்கையம்மன் சிரசு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதையொட்டி வழிநெடுகிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த பக்தர்களும் இதில் திரளாக கலந்து கொண்டனர். பம்பை, உடுக்கை இசைகளுடன் சிலம்பாட்டம், புலி ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் ஊர்வலத்தில் அரங்கேற்றப்பட்டன. கெங்கையம்மன் கோயில் சிரசு மண்டபத்தில் கண் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சியாக நடைபெற்றது. அதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். முன்னதாக சிரசு ஊர்வலத்தை முன்னிட்டு 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த திருவிழாவையொட்டி வேலூர் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.