வாணியம்பாடி அருகே சாலையில் சரிந்து விழுந்த ராட்சத பாறை: சாலையின் நடுவில் விழுந்த ராட்சத பாறையை அகற்றும் பணி தீவிரம்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கனமழையால் மலை மீது இருந்த ராட்சத பாறை ஒன்று கீழே சரிந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர் தெற்கு மில்லத் நகர் பகுதியில் சுமார் 5,000க்கு மேட்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் சாலை ஓரம் முனியப்பன் என்பவர் வீட்டில் அருகில் மலைக்குன்று மீது ராட்சத பாறை இருந்துள்ளது. கடந்த இரண்டு, மூன்று நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்த மழை காரணமாக மண்சரிந்து ராட்சத பாறை சாலை நடுவில் விழுந்து நின்றுள்ளது.
இரவில் நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் சாலை இருபுறம் வீடுகள் இருந்தாலும் உயிர்சேதம் மற்றும் பொருள் சேதம் ஏதும் ஏற்படவில்லை. சாலை நடுவில் ராட்சத பாறை விழுந்துள்ளதால் அவ்வழியாக செல்லும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டது. சாலை நடுவில் உள்ள ராட்சத பாறை உடனடியாக அகற்ற சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அப்பகுதியில் ஆபத்தான உள்ள ராட்சத பாறை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.