Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலக்கை அருவி அருகே காட்டாற்று வெள்ளத்தில் 4 ஆயிரம் வாழைகள் நாசம்: இன்றும் மழை பெய்தால் ஊருக்குள் புகும் அபாயம்

பூதப்பாண்டி: உலக்கை அருவி அருகே கனமழையால் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம் அந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 4 ஆயிரம் வாழைகளை அடியோடு சாய்த்துவிட்டது. இன்றும் மழை தொடர்ந்தால் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் பிற்பகல் 3 மணி முதல் இரவு வரை மழை பெய்கிறது. குறிப்பாக மலையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பூதப்பாண்டியை அடுத்த உலக்கையருவி மலை, அசம்பு மலை பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது. இந்த காட்டாற்று வெள்ளம் உலக்கை அருவி பகுதியையொட்டி அமைந்துள்ள சட்டரஸ் பாலத்துக்கு இடையே சீறிப்பாய்ந்து செல்கிறது. இந்த பகுதியையொட்டி பெருந்தலைக்காடு பகுதியை சேர்ந்த அனிஷ் என்ற விவசாயி 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் சுமார் 5 ஆயிரம் வாழைகளை பயிரிட்டிருந்தார்.

வாழை குலை தள்ளும் பருவத்துக்கு வந்த நிலையில், இந்த காட்டாற்று வெள்ளம் நேற்று அனிஷ் பயிரிட்ட விவசாய நிலத்துக்குள் புகுந்து அங்குள்ள சுமார் 4 ஆயிரம் வாழைகளை அடியோடு சாய்த்துவிட்டது. இன்று காலையிலும் தண்ணீர் குறையாமல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று இரவிலும் தொடர்ந்து மழை பெய்தால் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிடுவதோடு மேலும் பல நிலங்களில் புகுந்து பயிர்களை நாசமாக்கிவிடும். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சட்டரஸ் பாலத்துக்கு அடியில் காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதால் அந்த பாலத்தின் வழியே செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.