Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் சகோதரர்கள் கொன்று புதைப்பு: உடலை நாய் கவ்வியதால் சிக்கிய போதை கும்பல்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போதை கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் அண்ணன், தம்பியை அடித்துக் கொன்று புதைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரது உடல்களும் நேற்று தோண்டியெடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தூத்துக்குடி கோயில் பிள்ளை நகர் அருகே பண்டுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரை கடந்த 25ம்தேதி முதல் காணவில்லை என்று அவரது அண்ணன் பொன்ராஜ் அளித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்தனர்.

இந்நிலையில் பண்டுக்கரை பகுதியில் மண்ணில் புதைக்கப்பட்ட நிலையில் ஒருவரது கை மட்டும் நேற்று முன்தினம் மாலை வெளியே தெரிந்ததால், நாய் அந்த கையை இழுத்து வெளியே போட்டுள்ளதாக தெர்மல்நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அது மாயமான அருள்ராஜாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். இதற்கிடையே அவரது அண்ணன் மாரிபாண்டியும் மாயமானது தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன், தாசில்தார் முரளிதரன் உள்ளிட்டோர் சென்று விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று காலை தாசில்தார் முரளிதரன் முன்னிலையில் புதைக்கப்பட்ட உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அப்போது முதலில் அருள்ராஜின் அண்ணன் மாரிபாண்டி உடல் கிடைத்தது. தொடர்ந்து தோண்டியதில் கீழே அருள்ராஜ் உடலும் இருந்தது. இருவரது உடல்களும் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரிதன், முனீஸ்வரன், லிங்கராஜ், காதர்மீரான் நகரைச் சேர்ந்த சங்கர் ஆகிய 4 பேரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், ரிதன் சகோதரர் கடந்த 6 மாதங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக ரிதனுக்கும், மாரிபாண்டி குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த 28ம்தேதி பண்டுக்கரை உப்பாத்து ஓடை பகுதியில் மது அருந்தி கொண்டிருந்தபோது ரிதன் கும்பலுக்கும், அங்கு வந்த மாரிபாண்டி, அருள்ராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரிதன் கும்பல், மாரிபாண்டியை வீடு புகுந்து மிரட்டல் விடுத்துச் சென்றனர். சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற அண்ணன், தம்பி இருவரும் மாயமாகியுள்ளனர். மாரிபாண்டி அடிக்கடி வெளியூர் சென்று 10 நாட்கள் கழித்து வருவார் என்பதால் அவரை பற்றி வீட்டினர் யாரும் கவலைப்படவில்லை.

ஆனால் அருள்ராஜ் விபத்தில் கண் பார்வை பாதிக்கப்பட்டவர் என்பதால் மறுநாள் இரவு வரை வீடு திரும்பாததால் சந்தேகம் ஏற்பட்டு, அவரது சகோதரர் பொன்ராஜ் தெர்மல்நகர் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையில் அவர்களை ரிதன் கும்பல் கடத்திச் சென்று அடித்துக் கொன்றுள்ளனர். பின்னர் சுமார் 1 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உப்பாத்து ஓடை பகுதியில் குழி தோண்டி இருவரையும் ஒரே இடத்தில் புதைத்துள்ளனர். நேற்று முன்தினம் (31ம்தேதி) மாலை சுமார் 3 அடி ஆழத்தில் புதைக்கப்பட்ட மாரிபாண்டியின் கையை நாய் கவ்வி இழுத்ததால் தான் இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது. இதையடுத்து ரிதன், முனீஸ்வரன், லிங்கராஜ், சங்கர் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.