Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தமிழக டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது: ஐகோர்ட் மதுரை கிளை!

மதுரை: தமிழக டிஜிபி நியமனம் தொடர்பான விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த வழக்கறிஞர் யாசர் அராபத், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால், ஆக. 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இவருக்கு பிறகு டிஜிபியாக நியமிக்க வேண்டிய தகுதியானவர்களின் பட்டியலை ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அரசு இதுவரை அனுப்பவில்லை.

ஆனால், சங்கர் ஜிவாலை அதே பொறுப்பில் கால நீட்டிப்பு செய்யவோ அல்லது யாரையாவது பொறுப்பு டிஜிபியாகவோ நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு எதிரானது. மாநில அரசால் வழங்கப்படும் மூத்த காவல்துறை ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை கொண்டு அடுத்த டிஜிபிக்கான தகுதியான நபரை வெளிப்படைத்தன்மையுடன் தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்களுக்கு சாதகமானவர்களை பொறுப்பில் வைத்துக் கொள்ள மாநில அரசு விரும்புவதாக தெரிகிறது. தமிழகத்தில் ஆணவக்கொலை, கொள்ளை போன்ற அச்சமூட்டும் சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட டிஜிபி பணியிடத்தை முறையாக நிரப்புவது அவசியம். இதுதொடர்பாக நடவடிக்கை கோரி ஒன்றிய உள்துறை செயலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் தலைமை செயலர் மற்றும் உள்துறை செயலர் உள்ளிட்டோருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, டிஜிபி பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளை நியமிக்கும் செயல்முறையை உடனடியாகத் துவங்குமாறும், தற்போதைய டிஜிபி ஓய்வுபெற்ற பின், அவரது பதவிக்காலத்தை நீட்டிக்கவோ, பொறுப்பு டிஜிபியை நியமிக்க கூடாது என்றும் இதற்கு இடைக்கால தடைவிதித்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளாட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள், டிஜிபி நியமனம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு 2006-ல் பிரகாஷ் சிங் வழக்கில் வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. இந்த வழிகாட்டுதல்களை 2019-ல் நீதிபதி தீபக் மிஸ்ரா தெளிவுபடுத்தியுள்ளார். டிஜிபி பதவியை சீனியர்களுக்கு தான் வழங்க வேண்டும் என நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறியுள்ளனர். டிஜிபி நியமனம் தொடர்பாக ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையமும் வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது.

இருப்பினும் இந்த வழிகாட்டுதல்களை பல மாநிலங்கள் பின்பற்றுவது இல்லை. எனவே டிஜிபி நியமனத்தில் என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது ? என்பது தொடர்பாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்க வேண்டும். இதில் முறைகேடு, விதிமீறல் இருந்தால் நீதிமன்றம் தலையிடும். மனு தொடர்பாக ஒன்றிய உள்துறை செயலாளர், தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 11ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தவிட்டனர்.