Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் உயர்கல்வி உரையாடல்கள் திட்டம்: அமைச்சர் கோவி. செழியன் துவங்கி வைத்தார்

சென்னை: வருங்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மீது ஜெனரேட்டிவ் ஏஐ ஏற்படுத்தும் தாக்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கை தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் இன்று நடத்தியது. ‘’உயர்கல்வி உரையாடல்கள்” என்பது தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் ஒரு புதிய திட்டம். இது உயர்கல்வி சார்ந்த முக்கிய தலைப்புகளில் துறை சார்ந்த நிபுணர்களைக்கொண்டு தொடர்ச்சியான மற்றும் கட்டமைக்கப்பட்ட கலந்துரையாடல் தளமாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உயர்கல்வியில் தொலை நோக்குடைய கொள்கை வடிவமைப்பிற்கான தேவைகளை கருத்தில் கொண்டு கல்வியாளர்கள், நிபுணர்கள். மாணவர்கள், பேராசிரியர்கள், உயர்கல்வித்துறை அலுவலர்கள், மற்றும் பிற பங்களிப்பாளர்கள் பங்குபெற்று கலந்துரையாடும் வகையிலான தொடர் கருத்தரங்குகள் நடத்தப்படவுள்ளன. மேலும் வழக்கமான கல்வி சார்ந்த தலைப்புகளுடன். புதிய மற்றும் பொதுப் பிரச்னைகளுக்கும் முக்கியத்துவம் தரும் வகையிலான தலைப்புகளையும் உள்ளடக்கி விவாதங்களை உருவாக்கும் நோக்கத்துடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் முதல் நிகழ்வாக, வருங்கால கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் மீது ஜெனரேட்டிவ் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) ஏற்படுத்தும் தாக்கம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கை, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சென்னையில் இன்று நடத்தியது. இதனை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை செயலாளர் சங்கர், கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் இன்னசென்ட் திவ்யா, தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்ற துணைத் தலைவர் விஜயகுமார், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம், ஜெனரேட்டிவ் ஏஐ தொழில்நுட்பங்கள் கல்வி சூழலிலும் வேலைவாய்ப்புகளிலும் எவ்வகையான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதையும், அவ்வாறான மாற்றங்களை எதிர்கொள்ள நமது மாநிலத்தின் உயர்கல்வி அமைப்புகளில் எத்தகைய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதையும் ஆராய்வதாகும்.நவீன காலத்தில் செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் வேகமாக வளர்ந்து வரும் சூழலில், தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவங்கள் அதற்கு பொருத்தமானதாகவும் எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப சீராக மாற்றமடையவும் செய்ய தேவையான ஆலோசனைகள் இக்குழுக் கலந்துரையாடலில் முன்வைக்கப்படும். இது பாடத்திட்ட வடிவமைப்பு, கற்பித்தல் முறைகள், தேர்வு மதிப்பீடு திட்டங்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆற்ற வேண்டிய கடைமைகள் ஆகியவற்றில் தேவைப்படும் மாற்றத்தையும் மாணவர்கள் பெற வேண்டிய அடிப்படை மற்றும் எதிர்கால திறன்களையும் ஆய்வு செய்யும்.

மேலும், வேலைவாய்ப்புகளில் மாறும் சூழலையும் இந்த கருத்தரங்கு கூட்டம் நுட்பமாக ஆய்வு செய்யும். சாதாரண மற்றும் வழக்கமான பணிகள் மெதுவாக தேவை குறைவதையும், அதற்கு பதிலாக அடிப்படை அறிவியல் சார்ந்த, அறிவு சார்ந்த, பயன்பாடு சார்ந்த வேலைகள் மட்டுமே நிலைத்திருக்கவோ அல்லது உருவாகவோ வாய்ப்பு உள்ளதையும் விவாதிக்கப்படும். தொழில்நுட்பம் மிக்க பொருளாதாரத்தில் தேவைப்படும் புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் திறன்கள் குறித்து விவாதிக்கவும், பாடத்திட்ட மாற்றங்களுக்கான தேவையையும் இந்த கூட்டம் முன்வைக்கும்.