Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செட்டிக்குளத்தில் ரவுண்டானா அமையுமா?.. பேரிகார்டுகள் வைத்து ஒத்திகை

நாகர்கோவில்: நாகர்கோவில் செட்டிக்குளம் சந்திப்பில் ரவுண்டானா அமைக்கப்பட வேண்டும் என்பது நீண்ட காலமாக கோரிக்கையாக இருந்து வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் ரவுண்டானா அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஆக்கிரமிப்பை அகற்றுவதுடன் தனியாரிடமிருந்து நிலங்களை வாங்கிய பிறகு தான் சாலையை விரிவாக்கம் செய்ய முடியும் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக மாநகராட்சி மேயர் மகேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கடந்த வாரம் ஆய்வு செய்த அவர் தற்போது பாதாள சாக்கடைக்கான குழாய் பதிக்கப்பட்டு சாலை சீரமைக்கப்பட வேண்டும்.

இந்த பணிகள் முடிவடைந்த உடன் ரவுண்டானா அமைப்பு தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது ரவுண்டானா அமைக்க சாத்திய கூறுகள் உள்ளதா? அவ்வாறு ரவுண்டானா அமைந்தால் நெருக்கடி இல்லாமல் வாகனங்கள் செல்ல வாய்ப்பாக இருக்குமா? என்பதை கண்டறியும் வகையில் தற்போது செட்டிக்குளம் சந்திப்பில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு சாலையை பிரித்து வாகனங்களை அனுப்பி வருகிறார்கள். இதில் நெருக்கடி இல்லாமல் வாகனங்கள் செல்கிறதா? என்பதும் ஆய்வு செய்யப்படுகிறது. இதில் நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் இருந்து செட்டிக்குளம் வரக்கூடிய வாகனங்கள் தான் அதிகளவில் நெருக்கடிக்கு உள்ளாகின்றன. எனவே இந்த பிரச்சனைக்கு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

தற்போது கன்னியாகுமரியில் சீசன் காலம் என்பதுடன் கிறிஸ்மஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து விடுமுறை காலங்கள் என்பதால் அதிக அளவில் வாகனங்கள் வருகின்றன. இதன் காரணமாக வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதனால் இந்த பகுதியில் கடுமையான நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் டிராபிக் போலீசார் நிறுத்தப்பட்டு வாகனங்களை நெருக்கடி இல்லாமல் அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.