Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓடும் ரயிலில் இறங்க முயன்றபோது விபரீதம்; நடைமேடையில் சிக்கிய பயணியை துரிதமாக காப்பாற்றிய போலீசார்: குவியும் பாராட்டு

ஈரோடு: கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை ஈரோடு ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து கொண்டு இருந்தது. அப்போது பயணி ஒருவர் ரயில் நிற்பதற்கு முன்பாகவே ‘டீ’ வாங்குவதற்காக மெதுவாக சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்க முயன்றார். இதில், எதிர்பாராதவிதமாக ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே அவர் தவறி விழுந்தார். ரயிலின் படிக்கட்டு கம்பியை இறுக்கமாக பிடித்து கொண்டதால், நடைமேடையிலேயே இழுத்து செல்லப்பட்டார்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரபீக் துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை பிடித்து இழுத்து நடைமேடைக்கு கொண்டு வந்தார். அவர் விரைந்து செயல்பட்டதால் அந்த பயணி பாதுகாப்பாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும், துரிதமாக செயல்பட்ட ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரபீக்கிற்கு ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் பாராட்டினர்.

இதுதொடர்பாக, ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ரயில்வே பாதுகாப்பு படை வீரர் அப்துல் ரபீக், சவால்களை எதிர்கொள்வதில் மிகுந்த துணிவும், விரைவான சிந்தனையும் கொண்டவர் என பாராட்டு பெற்றுள்ளார். கோவையில் இருந்து சென்னைக்கு சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை துரிதமாக செயல்பட்டு, காப்பாற்றியுள்ளார். இது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ள பாதுகாப்பு படை வீரர்களின் அர்ப்பணிப்பு மற்றும் கடமையை வெளிப்படுத்துகிறது.

அப்துல் ரபீக்கின் வீரத்திற்காகவும், அவரது துணிவிற்காகவும், உறுதியான கடமைக்காகவும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது தன்னிச்சையான செயல்பாடு என்பது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும், ரயில்வே பாதுகாப்பு படையின் பணியை வெளிப்படுத்தி இருக்கிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.