தர்மபுரி: தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் பிரசாரம் செய்தபோது, கம்யூனிஸ்ட் கட்சியே இல்லை என்று சொன்னார். அதன் பிறகு சிதம்பரத்தில் பேசும்போது, கம்யூனிஸ்ட் கட்சி எங்கள் கூட்டணிக்கு வந்தால், ரத்ன கம்பளம் விரித்து வரவேற்போம் என்று சொன்னார். அது ரத்தக்கறை படிந்த கம்பளம் என எதிர் வினையாற்றினோம். வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற கட்டாயத்தில், எடப்பாடியை நிர்பந்தப்படுத்தி அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைத்துள்ளது.
அதில், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்கிறார். ஆனால், எடப்பாடி கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்கிறார். மற்றக் கட்சிகளுடன் கூட்டணி சேர்க்க விஜய் கூப்பிடுகிறார். ஆனால், விஜய் நான் தான் முதல்வர் என்கிறார். சீமான் தொடக்கத்திலேயே கதவை மூடி விட்டார். அப்பா-மகன் குடும்ப சண்டையால் பாமக பிளவுபட்டுள்ளது. இந்த சூழலில் சேலத்தில் நடைபெறும் சிபிஐ மாநில மாநாடு, முக்கியத்துவம் பெறும் வகையில் இருக்கும். அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை.
நிரந்தர எதிரியும் இல்லை என்ற கொள்கையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு உடன்பாடு இல்லை. எங்களுக்கு நிரந்தர எதிரி ஆர்எஸ்எஸ் தான். இதுதான் எங்கள் அரசியல். ஆர்எஸ்எஸ்சை வீழ்த்த யாருடன் வேண்டுமானாலும் சேருவோம். நாடாளுமன்றத்தில் அமித்ஷா பேசியது ஆணவப்பேச்சு. அதனை முழுமையாக கேட்டுப் பாருங்கள் தெரியும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு, வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை சேலத்தில் நடக்கிறது. 16ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் தமிழக அரசியல் குறித்து ஆராய்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.