Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பனகல் பார்க்-கோடம்பாக்கம் வரை சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக நிறைவு: மெட்ரோ தகவல்

சென்னை: பனகல் பார்க் - கோடம்பாக்கம் வரையில் சுரங்கம் தோண்டும் பணி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை நகரம் முழுவதும் 118.9 கி.மீ நீளத்திற்கு மூன்று வழித்தடங்களுடன் மிகவும் எதிர்பார்க்கப்படும் 2ம் கட்டத் திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது.

4வது வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரையிலான 10.03 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் ஐடிடி சிமென்டேஷன் இந்தியா நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 4 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை நிதியுதவி வழங்குகின்றன.

4வது வழித்தடத்தில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில், கடந்த 2024 மே 2ம் தேதி பனகல் பூங்காவில் இருந்து கோடம்பாக்கம் நிலையம் நோக்கி சுரங்கம் தோண்டும் பணியயை தொடங்கி, 2047 மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கும் பணியை வெற்றிகரமாக முடித்துவிட்டு ஆற்காடு சாலையில் மீனாட்சி கல்லூரிக்கு அருகில் கோடம்பாக்கம் நிலையத்தை நேற்று வந்தடைந்தது.

கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.8 கி.மீ நீளத்தில் 12 சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் 18 உயர்த்தப்பட்ட நிலையங்களை கொண்ட வழித்தடம் 4ல் வளர்ச்சியில் இந்த சாதனை ஒரு முக்கிய படியாகும். இது மிகவும் நீளமான சுரங்கப்பாதை பிரிவாகும். சுரங்கம் தோண்டும் இயந்திரம் மயில் 190 கட்டிடங்கள் வழியாக செல்ல வேண்டியிருந்தது, இரண்டு தேவாலயங்கள் வழியாகவும், கோடம்பாக்கம் மேம்பாலத்திற்குக் கீழேயும் சென்றது.

இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், ஐடிடி சிமென்டேஷன் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயந்த பாசு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர்கள் ரேகா பிரகாஷ், உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர்.