*ஒரே நாளில் கிடைத்ததால் ஓவர் குஷி
ராமேஸ்வரம் : பாம்பன் மீனவர்கள் வலையில் சுமார் 400 டன் கிளாத்தி மீன்கள் சிக்கியது. இதனால் ஒரே நாளில் ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடந்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்தில் நேற்று முன்தினம், நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று, மன்னார் வளைகுடா கடலில் இரவு முழுவதும் மீன் பிடித்து நேற்று காலை கரை திரும்பினர்.
மீனவர்கள் வலையில் சீலா, பாறை, மாவுலா, நகரை, விலை மீன், மத்தி, காரல், கிளாத்தி, சாளை உள்ளிட்ட பல வகையான மீன்கள் சிக்கியிருந்தன. பிடித்து வந்த மீன்களை, கூடைகளில் நிரப்பி மீன் இறங்குதளத்தில் விற்பனைக்காக மீனவர்கள் அடுக்கி வைத்தனர். இதில் கிளாத்தி மீன் டன் கணக்கில் சிக்கியிருந்ததால் இறங்கு தளம் முழுவதும் கிளாத்தி மீன் குவியலாக காணப்பட்டது.
50 படகுகளில் சராசரியாக 4 டன் வரையும், அதிகபட்சமாக 6 டன் வரையும், மற்ற படகுகளில் அதிகபட்சமாக 3 டன் வரையும் கிளாத்தி மீன்கள் சிக்கியிருந்தன. அதிகளவில் மீன்கள் சிக்கியதால் மீனவர்கள் இரவே கரைக்கு திரும்பி மீன்களை இறக்கினர்.
மருத்துவ குணங்கள் கொண்ட கிளாத்தி மீன் டன் கணக்கில் சிக்கிய நிலையில், ஒரு கிலோ ரூ.180 முதல் ரூ.200 வரை விற்பனையானது. இதனால் பாம்பன் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வியாபாரிகள் மீன்களை வாங்கிச் செல்ல போட்டி போட்டதால் மீன் இறங்குதளம் பரபரப்பாக காணப்பட்டது.
நேற்று ஒரே நாளில் பாம்பன் தெற்குவாடி மீன் இறங்கு தளத்தில் சுமார் ரூ.8 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது. மீனவர்கள் கூறுகையில், ‘‘ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் இறுதி வரையில் மட்டுமே கிளாத்தி மீன்கள் கிடைக்கும். கேரள கடல் பகுதியில் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்த நிலையில், டன் கணக்கில் கிளாத்தி மீன்கள் சிக்கியது. நேற்று முன்தினம் கேரள கடலில் தடைக்காலம் நிறைவடைந்தது. அதனால் இனி கிளாத்தி மீன்வரத்து படிப்படியாக குறைய தொடங்கும்’’ என்றனர்.
Pamban fishermen caught 400 tons of fish worth Rs. 8 crore.