Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஓபிசி ஒதுக்கீட்டில் 20,088 மருத்துவ இடங்கள் என்பது பல குடும்பங்களின் பல தலைமுறை கனவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி ஒதுக்கீட்டில் 20,088 பேர் பயனடைந்துள்ளதை சுட்டிக்காட்டி ‘பல குடும்பங்களின் பல தலைமுறை கனவு’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று 2021ம் ஆண்டு இதே நாளில் (ஜூலை 29) தீர்ப்பு வெளியானது. அதை நினைவூட்டும் வகையில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் தனது எக்ஸ் வலைதளத்தில் ‘‘2021 - ஜூலை 29 அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி 27 சதவீத இட ஒதுக்கீடு வென்று காட்டிய சமூகநீதி நன்னாள்.

சமத்துவ நாயகர், சமூகநீதிக் காவலர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காட்டிய வழியில், ஓபிசி மாணவர் நலனில் கொண்ட உறுதியில் சட்டப் போராட்டத்தில் வென்று காட்டினோம். இந்திய அளவில் நிலைநாட்டப்பட்ட ஓபிசி மருத்துவ மாணவர்களின் கல்வி உரிமை. 14 வருடங்களாக மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அவர்களின் உரிமைகளை மீட்டெடுத்ததன் மூலம்,

ஆண்டுதோறும் இந்திய அளவில் மருத்துவப் படிப்புகளில் 4,022 இடங்களும், பல் மருத்துவ படிப்புகளில் 1000 இடங்களும் கிடைப்பெற்ற நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளில் மொத்தமாக 20,088 மருத்துவ இடங்களை ஓபிசி வகுப்பினைச் சார்ந்த மாணவர்கள் பெற்று பயனடைந்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினின் பணி மகத்தானது மட்டுமல்ல, வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. சாதனைப் பயணம் தொடரட்டும்! சமூகநீதி தீர்ப்பு சிறக்கட்டும்!

இவ்வாறு பதிவிட்டிருந்தார்.

இதனை மேற்கொள்காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: 20,088 இடங்கள் பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு. சதிக்கு கால் முளைத்து சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது - இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்.

சமூகநீதிக்கான இந்த அரசியலையும், போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.