ராமேஸ்வரம்: நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது 4 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்ந்து வருவதால் மீனவர்கள் கவலையில் உள்ளனர்.
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவதுமான சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை வருகிறது.
இந்நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் வந்த இலங்கை கடற்படையினர் 4 மீனவர்களையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விசைப்படகையும் சிறைப் பிடித்துச் சென்றனர். நாளுக்கு நாள் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வரும் நிலையில், தற்பொழுது மீண்டும் மீனவர்களை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுவது ஏழை மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ளது. இந்த சிக்கலான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காணப் பிரதமர் மோடி நேரடி கவனத்தைச் செலுத்த வேண்டும். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களுடன் கூடிய படகுகளையும் விடுவிக்க முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்' என சில தினங்களுக்கு முன் தமிழகம் வந்திருந்த பிரதமரிடம், முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பாக வழங்கப்பட்டிருந்த கோரிக்கை மனு வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.