கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்க வேண்டாம் என ஒ.பி.எஸ்.ஸை சமாதானப்படுத்த முயற்சித்தேன் : நயினார் நாகேந்திரன்
சென்னை : பாஜக தலைமையால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் . இதன் எதிரொலியாக, தனது அரசியல் வாழ்க்கையில் முதன்முறையாக பாஜகவுக்கு எதிராக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதன் தொடர்ச்சியாக, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் இதுவரை கொண்டிருந்த உறவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு முறித்துக் கொள்வதாக, அதன் முக்கியத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். இதனிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அதில், "ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடும் முன்பே அவரிடம் போனில் பேசி இருந்தேன். கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை எடுக்க வேண்டாம் என ஒ.பி.எஸ்.ஸை கேட்டுக்கொண்டேன். வெளியேற வேண்டாம் என வலியுறுத்தியும் ஓ.பன்னீர்செல்வம் ஏன் இந்த முடிவை எடுத்தார் எனத் தெரியவில்லை. அவருடைய சொந்தப் பிரச்னை ஏதும் காரணமா எனத் தெரியவில்லை.
கூட்டணியில் இருந்து விலகியது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். அவர் என்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை சந்திக்க நான் ஏற்பாடு செய்திருப்பேன். இப்போதும் ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டால் 26-ந்தேதி தமிழகம் வரும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்வேன்.ஓ.பன்னீர்செல்வம் தொகுதிப் பிரச்சனைக்காக முதலமைச்சரை சந்தித்திருக்கலாம்; அல்லது சொந்த பிரச்சனைக்காக சந்தித்திருக்கலாம். ஒரு எம்.எல்.ஏவாக நான்கூட முதலமைச்சரை சந்திக்கலாம்.இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை. அது தவறான கருத்து. இதுதொடர்பாக டி.டி.வி. தினகரனிடமும் நான் பேசியிருக்கிறேன்."இவ்வாறு தெரிவித்தார்.