நாசா, இஸ்ரோ இணைந்து உருவாக்கிய அதி நவீன நிசார் செயற்கைக்கோள் : நாளை ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்கிறது!!
பெங்களூரு : நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து தயாரித்த அதிநவீன நிசார் செயற்கைக்கோள் நாளை விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நாசா - இஸ்ரோ "செயற்கை துளை ரேடார்" நிசார் என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். பூமியின் மாறிவரும் சூழல்கள் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும்.
இதன் மூலம் பூமியின் சுற்றுச்சூழல் அமைப்புகள்,காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் மாற்றங்கள், வள மேலாண்மை மற்றும் இயற்கை பேரழிவுகள் குறித்த முக்கியமான நுண்ணறிவு தகவல்களை வழங்கும்.ரூ.12,000 கோடி மதிப்பிலான நிசார் செயற்கைக்கோளின் தயாரிப்பு பணிகள் நிறைவுபெற்று பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், நிசார் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து நாளை மாலை 5.40 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நிசார் செயற்கைக்கோளின் எடை 2,392 கிலோ ஆகும்.