Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முத்தியால்பேட்டையில் மெத்தம்பெட்டமைன் மூலப்பொருளான சூடோ எபிட்ரின் 5 கிலோ பறிமுதல்: 3 பேர் அதிரடி கைது

தண்டையார்பேட்டை: சென்னை முத்தியால்பேட்டை பொன்னியம்மன் கோயில் தெருவில் ஒரு கட்டிடத்தில் செயல்படும் அலுவலகத்தில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்க உதவும் மூலப்பொருள்களில் ஒன்றான சூடோ எபிட்ரின் என்ற வேதிப்பொருளை பதுக்கி வைத்திருப்பதாக காவல் ஆணையரின் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் போதைப்பொருள் வியாபாரி போல், கும்பலில் உள்ள தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சேவியர் என்பவருடன் செல்போனில் தொடர்புகொண்டு போதை பொருள் வேண்டும் என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர், எந்த பகுதிக்கு வரவேண்டும் என கேட்டபோது, ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வரும்படி கூறியுள்ளனர். அதன்படி போதை பொருளுடன் வந்த சேவியரை மறைந்திருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் இருந்து போதை பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருளான 5 கிலோ சூடோ எபிட்ரினை பறிமுதல் செய்தனர். இவர் கொடுத்த தகவலின்பேரில், திருவல்லிக்கேணியை சேர்ந்த செய்யது இப்ராஹிம், சூளை பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், ஒரு கிலோ சூடோ எபிட்ரின் வேதிப்பொருளை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அதை இரண்டே கால் லட்சம் ரூபாய்க்கு, போதைப்பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வார்களாம். இதை அவர்கள் மளிகை பொருட்களில் மறைத்து வைத்து (குறிப்பாக மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, பருப்பு வகைகள்) கப்பல் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பார்களாம். ஒரு கிலோ சூடோஎபிட்ரினை கப்பலில் கடத்தி செல்ல டிரான்ஸ்போர்ட் செலவு ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கவேண்டுமாம். கொள்முதல், கடத்தல் செலவு என ஆஸ்திரேலியாவுக்கு ஒரு கிலோ சூடோ எபிட்ரின் அனுப்ப மூன்றரை லட்சம் ரூபாய் செலவாகுமாம்.

ஆஸ்திரேலியாவில் ஒரு கிலோ 7 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வார்களாம். போதைப்பொருள் கடத்தலின்போது போலீசார், சுங்கத்துறை, டிஆர்ஐயிடம் சிக்கிக்கொண்டவர்கள் தங்கள் நெட்வொர்க்கை காட்டி கொடுத்தால் (தகவல் தெரிவித்தால்) அடுத்த முறை அவருக்கு கடத்தலில் வாய்ப்பு கொடுக்கமாட்டார்களாம் அல்லது சம்பந்தப்பட்ட நபரை கொன்றுவிடுவார்களாம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.