Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குமரி, காஞ்சிபுரம் மற்றும் கோவை கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆய்வு: முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார்

சென்னை: “உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து கன்னியாகுமரி, காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்தபடியே அலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா, காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், கோயம்புத்தூர் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, முதல்வர் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், முகாம்களுக்கு மனுக்களை அளிக்க வரும் மக்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, இதுவரை அந்த மாவட்டங்களில் நடத்தப்பட்ட முகாம்களின் எண்ணிக்கை, பெறப்பட்ட மனுக்களின் விவரங்கள் போன்றவை குறித்து கேட்டறிந்தார்.

அத்துடன் “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் மனுக்கள் அளிக்க வந்த பயனாளிகளிடம் முதல்வர், காணொலி வாயிலாக கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். “உங்களுடன் ஸ்டாலின்” முகாமில் கலந்துகொண்டு பயனடைந்த பயனாளிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், தலைமைச் செயலாளர் முருகானந்தத்திடம் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். பல முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார். இந்நிகழ்வின்போது, அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

* ‘விரைவில் உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்’

மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்கு பிறகு, விரைவில் உங்களை சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளர். மருத்துவமனையில் இருந்து நேற்று காணொலிகாட்சி வாயிலாக, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு:

மருத்துவமனையில் இருந்தபடியே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசு கோப்புகளிலும் கையெழுத்திட்டேன். மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்கு பிறகு, விரைவில் உங்களை சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.