Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொல்லிமலை மலைப்பாதையில் விபத்து; 20 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து டிரைவர் பலி: 7 மாணவர்கள் படுகாயம்

சேந்தமங்கலம்: கொல்லிமலை மலைப்பாதையில் 2வது கொண்டை ஊசி வளைவு அருகே 20 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து டிரைவர் உயிரிழந்தார். கல்லூரி மாணவர்கள் 7 பேர் படுகாயமடைந்தனர். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வளப்பூர் நாடு செல்லிப்பட்டியை சேர்ந்தவர் குழந்தையன் மகன் ஜெயக்குமார் (23). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். நேற்று சேந்தமங்கலம் அரசு கலை கல்லூரியில் படித்து வரும் திவாகர், மணிகண்டன், இலங்கேஸ்வரன், முருகன், விஸ்வநாதன், கதிர், கவின் ஆகிய 7 மாணவர்களை ஏற்றி கொண்டு கொல்லிமலைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

காரவள்ளி சோதனைச்சாவடியில் இருந்து கார் மலைப்பாதையில் சென்றது. அப்போது, 2வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியவுடன் சிறிது நேரத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவரில் மோதி, 20 அடி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், கார் நொறுங்கியது. டிரைவர் ஜெயக்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாணவர்கள் 7 பேரும் படுகாயமடைந்தனர்.

தகவலின்பேரில், வாழவந்தி நாடு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயமடைந்த மாணவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஜெயக்குமாரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக, சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.