லண்டன்: வலது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகினார். மேலும் அந்த அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சரும் அணியில் இடம்பெறவில்லை. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்று இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
இங்கிலாந்து அணியின் கேப்டனும் நட்சத்திர ஆல்ரவுண்டருமான பென் ஸ்டோக்ஸ், இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் இருந்து தோள்பட்டை காயம் காரணமாக விலகியுள்ளார். இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்ட் போட்டிகளில் தனது அபாரமான ஆட்டத்தால் போட்டியின் நாயகன் விருதை வென்றார். ஸ்டோக்ஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மொத்தம் 35 ஓவர்கள் பந்து வீசினார். அப்போது அவரது வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டோக்ஸ்க்கு ஏற்பட்ட காயத்தால் அவர் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக, நாளை (ஜூலை 31 வியாழக்கிழமை) லண்டனில் உள்ள ஓவலில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடும் அணியின் கேப்டனாக ஓல்லி போப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லியாம் டாசன் ஆகியோரும் கடைசி டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை. ஜேக்கப் பெத்தேல் அணியில் சேர்க்கப்பட்டு 6வது இடத்தில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டார்.
5வது போட்டிக்கான இங்கிலாந்து அணி: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப் (கேப்டன்), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தேல், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங்.